அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Sunday, February 22, 2009

கவிஞர் தஞ்சை நபிநேசன் காலமானார்

தஞ்சாவூர், பிப்.22-

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தஞ்சை மாவட்ட பொருளாளரும், தலைமை நிலைய பேச்சாளருமான சமுதாய கவிஞர் தஞ்சை நபிநேசன் (ஜியாவுதீன்) இன்று (22-2-09) அதிகாலை தஞ்சையில் காலமானார். அவரது ஜனாஸா நல்லடக்கத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளும், சமுதாயப் பிரமுகர்களும் பங்கேற்கின்றனர்.

தஞ்சை நபிநேசன் என்று பரவலாக அறியப்பட்ட எச். ஜியாவுதீன் 1992-ம் ஆண்டு முதல் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் சேவையாற்றி வருகிறார்.

தஞ்சை மாவட்ட காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர், மாநில காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர் போன்ற பதவிகளை வகித்த அவர் தஞ்சை மாவட்ட பொருளாளராக பதவியேற்று முஸ்லிம் லீகின் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

பூண்டி புஷ்பா கல்லூரியில் பி.எஸ்ஸி., பட்டம் பெற்ற அவர் அண்ணாமலை பல்கலைக்கழக அஞ்சல்வழி கல்வி மூலம் எம்.ஏ. பட்டம் பெற்றார். சிறந்த பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்க அவர் ஏராளமான நுல்களை எழுதியுள்ளார்.

விசா பறவைகள்|, புனித நபியே - புகழ் நிலவே|, பிரார்த்தனைப் பூக்கள்|, பச்சை வானில் பொன்விழா பிறைகள்|, தாஜ்மஹால் மனசு|, அண்ணல் நபியின் அற்புத அறிவுரைகள்|, என் நண்பனும் - தேநீர் கோப்பையும்|, புரியாத நட்சத்திரங்கள்| போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

இலங்கை வானொலியில் இவரது உரைகள் இடம் பெற்றிருக்கின்றன.

கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை 5 மணியளவில் தஞ்சையில் அவரது இல்லத்தில் காலமானார்.

அவருக்கு தாயும், மனைவியும் உள்ளனர்.

இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் ஆற்றங்கரை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடி யில் அவரது ஜனாஸா நல்லடக்கம் நடை பெறுகின்றது.

கவிஞர் தஞ்சை நபிநேசன் மறைவு குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது-

கவிஞர் நபிநேசன் சிறந்த கவிஞர். கட்டுரையாலும், கவிதையாலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கொள்கை கோட்பாடுகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர். முஸ்லிம் லீகின் வரலாற்றையும், முன்னணி தலைவர்களை படம்பிடித்துக் காட்டுவதில் வல்லவராக திகழ்ந்து வந்தவர்.

சமுதாய எழுச்சிக்கும், மார்க்கத் துறையின் வளர்ச்சிக்கும், முஸ்லிம் லீகின் வலிமைக்கும் காலமெல்லாம் பணியாற்றிய நனிசிறந்த நல்லவர்.

முஸ்லிம் சமுதாயத்தினர் மற்றும் முஸ்லிம் லீகில் உள்ள ஒவ்வொரு வரையும் சரியாக எடைபோடுவதிலும் அவர்களின் பற்றி எழிலார்ந்த குணங்களை விளக்குவதிலும் வல்லவராக விளங்கியவர்.

அண்மையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மணிவிழா மாநாட்டில் பங்கேற்று விருதையும் பெற்றார்.

கவியரங்கம், பட்டிமன்றம், சர்வகட்சி கூட்டங்கள் அனைத்திலும் பங்கேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகினுடைய கொள்கைகளை தெளிவாகவும், உறுதியாகவும் விளக்க கூடியவராக விளங்கி வந்தார்.

அவரின் மறைவு முஸ்லிம் லீகிற்கு பேரிழப்பாகும். தாய்ச்சபையின் சார்பில் மறைவுற்ற கவிஞர் நபிநேசனின் குடும்பத்தா ருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அவரின் மஃபிரத்துக்கு அனைவரும் துஆ செய்திட கேட்டுக்கொள்கின்றேன்.

No comments:

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template