அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Sunday, February 28, 2010

இலங்கையில் முஸ்லீம் லீக் தலைவர்களுக்கு வரவேற்பு

இன்று காலை முதல் இரவு வரை இலங்கை நாட்டின் வெலிகமை நகரில், அத்தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா சார்பில் மீலாத் பெருவிழா நடைபெறுகிறது.



இலங்கை - இந்திய மார்க்க அறிஞர்களும், சமுதாய அறிவாளர்களும் பங்கேற்று உரையாற்றவுள்ள இவ்விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணிச் செயலாளர் மௌலானா தளபதி ஷஃபீகுர் ரஹ்மான், ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுவதோடு, குத்புல் ஃபரீத், ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அல்ஹஸனிய்யுல் ஹாஷிமீ (ரலி) அவர்களின் அறபு - தமிழ் அகராதி நூலை பேராசிரயர் கே.எம்.கே, வெளியிடுகிறார்.



காயல்பட்டினம் மவ்லவி எச்.ஏ. அஹமது அப்துல் காதிர் ஆலிம், சென்னை மவ்லவி ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, திருச்சி மவ்லவி இப்ராஹீம் ரப்பானி, மவ்லவி ஹுசைன் முஹம்மது மன்பஈ ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.
.


நாளை - மார்ச் 1ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் இலங்கை முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் தலைமையில் பேராசிரியர், மௌலானா தளபதி, உள்ளிட்ட குழுவினருக்கு வரவேற்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து நிருபர் சந்திப்பும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இலங்கை காயல் நல மன்ற துணைத்தலைவர் ஹாஜி பி.எம்.ரஃபீக், செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி ஜவாஹிர், ஹாஜி ஆரிஃப் உமர் லெப்பை உள்ளிட்டவர்கள் செய்து வருகின்றனர்.



முன்னதாக, இலங்கை வருகை தரும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில மார்க்க அணிச் செயலாளர் தளபதி ஷஃபீக்குர் ரஹ்மான் உள்ளிட்ட குழுவினருக்கு வரவேற்பளிப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, இலங்கை காயல் நல மன்றத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் 26.02.2010 இரவு 7.30 மணியளவில் கொழும்பு புகாரீ அன் கோ இல்லத்தில், இலங்கை காயல் நல மன்றத் தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது.



இலங்கை வெலிகமை நகரில் நடைபெறவுள்ள மீலாத் விழாவில் நூல் வெளியிட்டு உரையாற்றுவதற்காக, இந்தியாவிலிருந்து வருகை தரும் இந்திய யு+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினருக்கு மன்றத்தின் சார்பில் விமான நிலையம் வரை சென்று வரவேற்பளிப்பதென இக்;கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.



ஹாஜி ஜவாஹிர், ஹாஜி எஸ்.எம்.பி.இஸ்மாயீல், ஹாஜி ஓ.எல்.எம்.ஆரிஃப், ஹாஜி எம்.என்.மக்கீ, ஹாஜி எஸ்.ஷாஹுல் ஹமீத், ஹாஜி டூட்டி முஹம்மத் முஹ்யித்தீன், ஹாஜி ஐ.கே.ஷாஜஹான், ஹாஜி பி.எம்.ரஃபீக் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



செய்தி ஊடக ஆராய்ச்சியக இலங்கை தூதுக்குழு பேராசிரியர் காதர் மொகிதீனுடன் சந்திப்பு!



இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகளை மீண்டும் தமிழகமெங்கும் ஒலிபரப்ப ஆவன செய்யக் கோரி, காயல்பட்டினம் செய்தி ஊடக ஆராய்ச்சியகத்தின் தலைவர் சாளை எஸ்.எம்.ஏ.பஷீர் ஆரிஃப், செயலர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகிய இருவரடங்கிய தூதுக்குழு இலங்கை சென்றுள்ளது.



அங்கு, இலங்கை காயல் நல மன்றத்தின் ஒருங்கிணைப்பில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்ஸன் சமரசிங்கேவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசிய பின், மேற்படி ஒலிபரப்பிற்காக இலங்கை மன்னார் பகுதியில் ஒலிபரப்புக் கோபுரமொன்றை நிறுவ ஆவன செய்வதாக அந்த இடத்திலேயே அவர் வாக்களித்தார்.



இச்செய்தி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டதோடு, இலங்கையின் தமிழ் - சிங்கள நாளிதழ்களிலும் இடம்பெற்றுள்ளது.



இந்நிலையில், 27.02.2010 அன்று காலை இலங்கை வருகை தந்துள்ள, இந்திய யு+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனை செய்தி ஊடக ஆராய்ச்சியகத்தின் மேற்படி தூதுக்குழுவினர் நேரில் சந்தித்துப் பேசினர்.இச்சந்திப்பில் மௌலான தளபதி ஷஃபீகுர் ரஹ்மான் உடனிருந்தார்



சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பில், போர் நிறைவுக்குப் பிறகான இலங்கை பல்சமயத்தினரின் நிலை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகளை மீண்டும் தமிழகத்தில் ஒலிபரப்பச் செய்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அவர்கள் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுடன் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டனர்.



பின்னர் கருத்து தெரிவித்த போராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டு மண்ணில் தவழ்ந்து வந்த காலங்களில், இரு நாட்டு முஸ்லிம்களின் கலாச்சாரம், மார்க்க ரீதியான செயல்பாடுகள், வர்த்தகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நல்ல தொடர்பு இருந்து வந்ததாகவும், மீண்டும் அந்த ஒலிபரப்பை தமிழகத்தில் கேட்கச் செய்கையில், தொய்வுற்றுள்ள இத்தொடர்பு மீண்டும் மலரும் என்றும் தெரிவித்தார்.



செய்தி ஊடக ஆராய்ச்சியகத்தின் தலைவர் சாளை எஸ்.எம்.ஏ.பஷீர், செயலர் எஸ்.கே.ஸாலிஹ், இலங்கை காயல் நல மன்ற துணைத்தலைவர் ஹாஜி பி.எம்.ரஃபீக், செயற்குழு உறுப்பினர்கள் ஜவாஹிர், ஓ.எல்.எம்.ஆரிஃப் உள்ளிட்டோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

No comments:

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template