அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]படைத்தவனை வணங்கு...படைபினங்களை வணங்காதே...!

Thursday, April 30, 2009

கருணாநிதியின் மறு உருவம்தான் திருமாவளவன்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் பேச்சு


சிதம்பரம், ஏப். 29-

காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள ஆயங்குடி தபால் நிலையம் எதிரில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மாநில தலைவர் காதர் மைதீன் கலந்து கொண்டு பேசியதாவது:- முஸ்லிம் மக்களின் உடன் பிறவா சகோதரர் திருமாவளவன். மறைந்த ஜி.கே. மூப்பனாருடன் இணைந்திருந்த காலத்தில் இருந்தே அவரை நன்றாக எனக்கு தெரியும். அவர் தனது சமுதாய மக்கள் நலத்திற்காகவும், சிறுபான்மை மக்களுக்காகவும் பாடுபடக்கூடியவர் என்பதை நன்கு அறிவேன்.

திருமாவளவன் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் ஜனநாயகத்தில் அங்கம் வகிக்கின்ற கூட்டணியில் சேர்ந்து உள்ளார். அதனால் தான் அவரை சிதம்பரத்தில் கருணாநிதி நிறுத்தி உள்ளார். அவர் தனது கட்சிக்கு நட்சத்திர சின்னத்தை வாதாடி பெற்றுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சின்னம் முஸ்லிம் லீக் கட்சிக்கு தொடர்புடைய சின்னம். ஆகவே எங்களுடைய சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று உரிமையோடு கேட்கிறேன்.

தமிழ்நாட்டில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஜமாத்துகள் உள்ளது. சிதம்பரம் தொகுதியில் சுமார் 11/2லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். இந்த ஓட்டுகள் அனைத்தும் திருமாவளவனுக்கே உரியது. ஜனநாயக முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

சிறுபான்மை மக்களுக்காகவும், முஸ்லிம் மக்களுக்காகவும் பாடுபடக்கூடியவர் கருணாநிதி. இலங்கை தமிழர் பிரச்சினையில் மற்றவர்களை போல் இல்லாமல் முழு அக்கறையுடன் செயல்பட்டவர் முதல்-அமைச்சர் கருணாநிதி. அவரது மறு உருவம் தான் திருமாவளவன். சிறுபான்மை மக்களுக்காக பாடுபட்டு வரும் அவரை சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

தேர்தலுக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சியில் அ.தி.மு.க. சேரும். இவ்வாறு காதர் மைதீன் பேசினார்.

No comments:

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template